நா
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

கொலைக் காற்று - 04


கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்

********************************************************

கௌதம் அரண்டு படுத்துக்கொண்டான். தலையை லேசாகத் திருப்பி கௌதமை கலக்கத்துடன் பார்த்தாள் வர்ஷா. ஜன்னலூடான நிலா வெளிச்சத்தில் கண் திறந்திருக்கிறானா, மூடியிருக்கிறானா என்றே தெரியவில்லை. சிறிது நேரம் நின்று திரும்பி கௌதமையே பார்த்தாள். ம்ஹீம். கௌதம் தூங்குவதுபோல்தான் அவளுக்கப் பட்டது. சூடான மூச்சை ஆறுதலாக விட்டபடி அறைக்கதவைத் திறந்தாள் வர்ஷா.


"ஏன் இங்க வந்தாய்?" கண்கள் சுருக்கியபடி கேட்டாள் வர்ஷா.

"SMS அனுப்பீட்டுத்தான வந்தனான்" குரலில் எகத்தாளம் தொனித்தது.

"ஏன்? ஒரு கிழமை தொல்லை குடுக்காமத்தான இருந்தனீ. இப்ப என்ன வேணும் உனக்கு? நாங்கள் இங்க ஹோட்டல்ல தங்கியிருக்கிறது எப்பிடித் தெரியும் உனக்கு? உன்னை வரவேண்டாம் எண்டு SMS செய்தனான் இல்ல" கேள்விகள் எல்லாம் குழப்பமான குரலில்.

"ஒரு கிழமையே பெரிய விசயம் வர்ஷா. எப்பிடி புது மாப்பிளை? நல்லாக் களைச்சுப்போய் படுத்திருக்கிறார் போல. ம்ம்ம்... நைட்டியில உன்னைப் பார்த்தபடியே சாகலாம் போல." தலையை ஆட்டியபடி உதட்டைப் பிதுக்கினான்.

வர்ஷா கலக்கத்துடன் கோபமாய்ப் பார்த்தாள்.

"சரி, கொழும்பு வந்து வீட்ட தங்காமல் என்ன இது ஹோட்டல்ல?" கண்களைக் குறுக்கியபடி கேட்டான்.

"அது உனக்குத் தேவையில்லை. போலீசோட சகவாசம் வச்சிருக்கிற உனக்கு நாங்கள் இங்க தங்கியிருக்கிறது தெரிஞ்சிருக்கும் எண்டு யோசிச்சனான். வந்திட்டாய். உனக்கிப்ப என்ன வேணும்?"

"வேற என்னத்தக் கேக்கப்போறன் வர்ஷூ. நீதான். நான் உன்னைப் பிரஷ்ஷாக் கூட ஆசைப்படேல. ஒரே ஒரு முறை."

"விது... இது தப்பு விது. நான் உன்னைப் ப்ரண்டாத்தான் நினைச்சனான். நீ இப்பிடி ஒரு நிலைமைக்குக் கொண்டு வருவாய் எண்டு நான் யோசிக்கவே இல்லை. பார் இப்ப அந்தாளுக்குத் தெரியாம உன்னோட களவாய் கதைத்துக்கொண்டு. நீயெல்லாம் ஒரு மனிசனாடா விது." கிட்டத்தட்ட அழுதிருந்தாள் வர்ஷா.

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"பார் அவன. பொறின் காரன் எண்டா கோப்பிறேற் பண்ணுவீங்கள் போல. எங்களுக்கு மாட்டீங்களோ."

வர்ஷாவுக்கு கண்கள் நிரம்பியிருந்தன.

"யே... முதல்ல கண்ணைத் துடை. அழகான பெண்கள் அழக்கூடாது."

சிறிது நேரம் யோசித்தவன்... "போட்டோ கொண்டு வந்திருக்கிறன்."

"எத்தனை தரம்தான் அதைக்காட்டிப் பயமுறுத்துவாய் விது. உந்தப் போட்டோவைப் பாக்கேக்க எல்லாம்.. சீ.. தூ.. ப்ரண்சிப்பையே கொச்சைப் படுத்தின நீயெல்லாம் ஒரு மனிசனா? றிப்புக்கு போன இடத்தில லேடீஸ் பாத்ரூமுக்குள்ள இருந்து நீ வெளியில வரேக்கயே யோசிச்சிருக்கோணும். நான் ப்ரண்சிப்பை நம்பினன் விது. ஏன்டா இப்பிடிப் போட்டோ எடுத்து வெருட்டுறாய்?"

"வர்ஷூ.. இது அந்தப் போட்டோ இல்ல. இது வேற. அந்தப் போட்டோக்களை இப்ப ஞாபகப் படுத்தாத. சே... அந்தப் போட்டோக்களில் நீ என்ன அழகடி. உனக்காகச் செத்தாலும் பரவாயில்லை. சரி விடு. அந்தப் போட்டோக்களை நினைச்சாலே ஹார்ட் உதறுது. ம்ம்ம்... இது வேற போட்டோ வர்ஷூ"

"முதல்ல வர்ஷூ எண்டு கூப்பிடுறத நிப்பாட்டு. அத விட வேற என்னடா போட்டோ வச்சிருக்கப்போறாய். வேற எங்கயும் அதேபோல எடுத்தியா?"

"இல்லை வர்ஷூக்குட்டி" சிரித்தான்.

"ஏன்டா.. வேண்டாம் நீ வர்ஷூ எண்டே கூப்பிடு"

"இது... உன்ர ஆளின்ட போட்டோ. பார் ஆளை. திருப்தியாய் நித்திரை கொள்ளுறான். என்னைத்தான் இப்பிடி அலையவிடுறாய்".

"என்ன. அவற்ர போட்டோவா?" இமைகளைச் சுருக்கியபடி சந்தேகமாய்க் கேட்டாள் வர்ஷா.

"போட்டோவைப் பார். பிறகு சந்தேகப்படு. இந்தா போட்டோ" காகோ டவுசரிலிருநத பெரிய பொக்கற்றிலிருந்து எடுத்துக் கையில் அழுத்தி வைத்தான் விது.

என்வெலப்பிலிருந்து போட்டோவை வெளியிலெடுத்தவளுக்கு வெளிச்சம் போதவில்லை.

"சுவருக்கு இந்தப்பக்கம் வெளியில வா வர்ஷூ. போன் டோச் இருக்கு பார்". போனை வெளியிலெடுத்தான்.

புகைப்படத்தில் ஜெனியில் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

நிமிர்ந்து விதுவை கோபமாகப் பார்த்தவள்... "இதில என்ன இருக்கு? அதுக்கு முதல் இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?"

"எப்பிடிக் கிடைச்சது எண்டது மாட்டர் இல்லை வர்ஷூ. போட்டோவைப் பாத்தியா. ஆரார் நிக்கிறதெண்டு?"

தலையச் சிறிது சரித்தவள்... "தெரீது. கௌதமும் ஜெனியும்"

"என்ன வர்ஷூ. சிம்பிளாச் சொல்லுறாய். கௌதம் ஜெனியை காதலிச்சது தெரியுமா? பிறகு அனுபவிச்சு ஏமாததிப்போட்டு இப்ப உன்னோட... இதை சிம்பிளா எடுக்கிறியே" குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது.

"இப்ப என்ன சொல்ல வாறாய் வி்து? கௌதம் ஜெனியை ஏமாத்திட்டு என்னோட இருக்கிற மாதிரி, நான் கௌதமை ஏமாத்திட்டு உன்னோட வரவேணுமா?"

"நீ படிச்சவள் வர்ஷூ. டக்கெண்டு விளக்குது. அதுவும் நான் என்னோட வரச்சொல்லிக் கேக்கேல. ஓரே ஒரு நாள். நீ என்னோட வந்தாலும் தப்பில்ல. நியாயம்தான் எண்டு காட்டத்தான் இந்தப் போட்டோ."

"விது... கௌதம் ஜெனியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பொறின்ல லவ்பண்ணினது பற்றியும் சொன்னவர். ஆனா அவர் ஜெனியை மோசமா ஏமாத்தேல. இந்தப் போட்டோவ முதல்ல சுருட்டிப் பொக்கற்றுக்குள்ள வை. அது சரி இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?" சந்தேகம் தொனித்தது.

விதுவின் முகம் சுரத்தை இழந்திருந்தது... "வர்ஷூ... நீ புது மாப்பிளை சொல்லிற எல்லாத்தையும் நம்புறாய்."

"விது. யோக்கியம் கதைக்கிறியா... அதை விடு. இந்தப் போட்டோ எப்பிடிக்கிடைச்சது?"

"எப்பிடிக்கிடைச்சா உனக்கென்ன?"

"விது... உனக்கு போலீஸ் சகவாசம் இருக்கெண்டு தெரியும். ஆனா இந்தளவுக்கெண்டு தெரியாது. இண்டைக்கு காலமை இன்ஸபெக்டர் சூர்யபிரகாஷ் இங்க வந்தவர். இந்தப் போட்டோவைக் காட்டி கௌதமோட ஏதோ கதைத்துக்கொண்டிருந்தவர். நான் கிட்டப் போனதும் கௌதமை மறச்சுக்கொண்டு ஜெனியை மட்டும் காட்டினவர். இந்தப் போட்டோவைப் பற்றி நான் கௌதமோட பிறகு கதைக்கிறன். உனக்கெப்பிடி இது கிடைச்சது?" கண்களை நேரே பார்த்தாள் வர்ஷா.

"தெரியுதில்ல... அதை விடு. உன்ர மற்றப் போட்டோக்கள் என்னட்டத்தான் கிடக்கு. உலகம் இன்ரர்நெற், ஈமெயில் எண்டு சுருங்கி வேற கிடக்குது." குரலில் ஏளனம் தொனித்தது.

 பெருமூச்செறிந்தாள் வர்ஷா... "நடக்காத விசயங்களுக்கு மினக்கடாதே விது. என்னையும் கௌதமையும் சுற்றி ஏதோதோ நடக்குது. ஜெனி... சேகர்..."

"எனக்கென்னவோ, புதுப்பொண்டாட்டி ஆசையில ஜெனியை கௌதம்தான் போட்டுத்தள்ளியிருப்பான் போல" நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் விது.

"விது. விசர்க்கதை கதையாதே. நாங்கள் கண்டியில இருந்தனாங்கள் அப்ப"

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"விது... இனியும் என்னால நிக்கேலாது. அவர் எழும்பிடுவார்."

"ஓரே ஒரு நாள் வர்ஷூ.  அதுக்குப் பிறகு உனக்கு இந்தப் பயமெல்லாம் இருக்காது."

"அது நடக்காது. நான் போறன்."

"ம்ம்ம்.. பார்ப்போம். நீ என்ர ப்ரண்ட் எண்டபடியாத்தான் இதுவரை அந்தப் போட்டோக்களை வெளியில விடேல. இப்பிடியே தொடர்ந்து இருக்கமாட்டேன் வர்ஷூ"

"தூ.. ப்ரண்ட் எண்டு சொல்லாத"

"சரி போ போ... அவர் எழும்பீடப்போறார். இந்தக் ஹோட்டல்ல கீழ் புளோரில 23 ஆம் நம்பர் ரூமிலதான் நான் இருக்கிறன். எப்பவும் எவைலபில். ஓகேயா"

"சரி போ போ" பல்லைக் கடித்தாள் வர்ஷூ.

***************************************************


அறைக் கதவை மெதுவாகச் சாத்தியவள்,  பாத்ரூம் கதவை சிறிது சத்தத்துடன் திறந்து உள்ளே சென்றாள். நிறைக் கலக்கங்கள் வந்து போயின. விது, றிப் போட்டோ, இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ், கௌதம், ஜெனி, மீண்டும் போட்டோ.. நிறையக் குழப்பங்களுடன் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு கட்டிலில் படுத்தாள் வர்ஷா.

கையை மேல போட்ட கௌதம்... "என்ன குட்டியா? உடம்புக்கு ஏதாவது?"

"ஓண்டுமில்ல கௌதம். பாத்ரூம் போய் வந்தனான்"

"படுக்கேக்கதானே பாத்ரூம் போய் வந்தனாங்கள்" சிரித்தபடி கேட்டான் கௌதம்.

"சும்மா இருங்கோ.. அதுக்கு.. இதெல்லாம் என்ன சொல்லிவச்சா வரும்"

"ஏன் குட்டியா சலிக்கிறாய். நல்லாக் கஷ்டப்படுத்தீட்டனா?"

"இல்ல கௌதம். எல்லாத்தையும் நினைக்கக் குழப்பமாக் கிடக்குது. ஜெனி, சேகர்..."

"ஆரம்பிச்சிட்டியா.. ஜெனியும் சேகரும் என்ர பிரண்ட்.. நான் எல்லாம் சொல்லியிருக்கிறன்.. கவலைப்படவேண்டியது நான்... நானே குழப்பமில்லாம இருக்கிறன்...." இழுத்தான் கௌதம்

"அதுதான் எனக்குக் குழப்பமாக் கிடக்குது கௌதம்..."

கட்டிலில் இருந்து எழுந்தே விட்டான் கௌதம். 

"நீ என்ன சொல்ல வாறாய் வர்ஷா? "

*************************************************************

கட்டிலில் என்ன நடந்தது? மறுநாள் என்ன நடந்தது? இனி லோசனின் கைகளில்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..


முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
 பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05
லோஷனால் எழுதப்பட்ட கதைநிலாக்காதல் 06







< இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை
எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக்
கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.


டமார்....


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஏனிந்த ஸ்ரியரிங்க் இவ்வளவு பெரிதாய் என் கண்முன்னே என்று அபத்தமாய் யோசிக்கும் முன்னே கறுப்பு நிறமாய் எங்கோ தூக்கி வீசப்பட்டான். கிரீச்சிட்ட வாகனங்கள் பின்னே சாவகாசமாய் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தன. திரும்பிய லொறி சிறிது தூரம் தள்ளி ஓய்ந்து நின்றது. தூரத்துப் காவற்துறை
அதிகாரி ஒருவர் பாய்ந்து வந்தார். பின்னைய வாகனங்களில் இருந்தவர்கள் இறங்கிவந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர் அல்லது வேதனையைக் கொட்டஆரம்பித்தனர். அதன் பின்னைய வாகனங்கள் விபத்துப் பற்றிய பிரக்ஞையின்றி குறுக்கு வழியால் நகர ஆரம்பித்திருந்தன.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


லாவண்யாவின் செல்பேசி அமைதியாக கிணுகிணுத்தது. அங்கலாய்ப்புடன் எடுத்தாள். ஹரிஷிடமிருந்து அழைப்பு,


"ஹலோ... உங்கட மிஸ்ட்கோல் இதில இருந்தது. நீங்கள்?"


ஆங்கிலத்தில் கதைத்த குரல் சத்தியமாக ஹரிஷுடையதல்ல.


"நான் லாவண்யா... ஹரிஷின் பிரண்ட்... நீங்கள்?"


"ஹரீஷ்...?? ஹரீஷ் ஒரு விபத்தில மாட்டியிருக்கிறார். இப்ப அவரை கொழும்பு பொது மருத்துவமனையில கொண்டுவந்து சேத்திருக்கு. அவரோட அம்மாக்கு அழைப்பெடுத்தோம். தொடர்பு கிடைக்கவில்லை. பற்றரி போட்டபோது கடைசியாக உங்கட அழைப்பு இதில் இருந்தது அதுதான் எடுத்தோம்"


"ஓகே.. நான் அங்கே உடனே வருகிறேன்"


ஸ்ரீ அங்கிளுக்கு ஈனக்குரலில் எடுத்தச்சொன்னதும், இவளேன் இப்படிப் பதறுகிறாள் என்று ஸ்ரீ அங்கிள் யோசித்ததும், அதே காசா அல்லது கூட வருமா என்று டிரைவர் யோசித்ததும்... அவரவருக்கு அவரவர் கவலைகள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சக்தியெல்லாம் வடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான் சந்தோஷ்.


நான்... ஹரிஷ்... லாவண்யா... வீடு... அம்மா... வைஷாலி... என்று அபத்தச் சிந்தனைகளெல்லாம் இறுதியாவதை உணர்ந்தான்.


"ஆ.. மாத்தயாட bag இல லப்டொப் இருக்கா? அதைக் கொண்டுவா" சொன்ன சிஐடி சந்தேஷைப் பார்த்தான்.


லப்டொப்பில் ஏதும் இருக்குதா என்று மீண்டும் அபத்தமாகச் சிந்திக்கத் தலைப்பட்டான், அவர்கள் பிடித்ததுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனத் தெரிந்தும்.


லப்டொப்பைத் திறந்த சிஐடி தவிர மற்ற இருவரும் பார்த்த பார்வைகளே அவர்களுக்கு லப்டொப் அந்நியம் என்று தெரிந்தது. லப்டொப்பையும் தங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள்.


Hibernate இல் இருந்த லப்டொப் unlock கடவுச்சொல் கேட்டது.


"பாஸ்வேர்டைச் சொல்லு" ஒரு எகத்தாளத்துடன் கேட்டான்.


"சந்தோஷாலி... s, a, n, t, h, o, s, h, a, l, i"


....


"ஓகோ... எல்லாம் திறந்தபடியே இருக்கு. மெயில்.. பேஸ்புக்...ம்ம்ம்... ருவிட்டரும் பாவிக்கிறியோ? இதென்ன தமிழ்மணம், ஏதும் LTTE சைற்றா?"


மற்ற இருவரும் இன்னும் தங்களையும், லப்டொப்பையும் மாறிமாறிப் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.


bag இனை எடுத்து துழாவிய சிஐடியின் கையில் டயலொக்கின் டொங்கிள் (Internet broadband connection) அகப்பட்டது. சந்தோஷைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.


லப்டொப்பில் அடித்து இணைக்க வெளிக்கிட்டவனுக்கு டயலொக் டொங்கிள் வழமைபோலவே விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது. அங்கே இங்கே என்று இடத்தை மாற்றி இணைப்பை ஒருவாறு இணைப்பை எடுத்துவிட்டான்.


ஜிமெயிலில் சில சொற்களைப் போட்டுத் தேடிப்பார்த்தான். எதுவுமில்லை. பேஸ்புக்கை மேய்ந்தான். ருவிற்றருக்கு வந்தவன் ஆர்வமானான். சந்தோஷ் வெறுமையாக, எந்தவித பிரக்ஞையுமின்றி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஹரீஷ் இமைகளைப் பிரித்தபோது ஏகப்பட்ட கவலை ரேகைகளை முகத்தில் அப்பியபடி லாவண்யா நின்றிருந்தாள். கைகளை தூக்கும்போது வலி உயிர்போவதை உணர்ந்தான். தலையில் கட்டு.


"ஹரீஷ், சீரியஸ் இல்லை. அசையாம இருங்கோ. அம்மா வந்துகொண்டிருக்கிறா. பிரச்சினை இல்லை"


"சந்தோஷ் எங்கே?" கேட்டபின்தான் லாவண்யாவைப் பார்த்தான். அவனுக்கு என்ன உணர்ச்சியைக் காட்டுவதென்றே புரியவில்லை.


"ஓம்... சந்தோஷின் போன் வேலைசெய்யுதில்லை. நான் அவனுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறன். நீங்க அமைதியா படுங்கோ"


கண்களால் லாவண்யாவை கிட்ட வரச்சொன்ன ஹரீஷ், கிசுகிசுத்தான், "சந்தோஷ் கடத்தப்பட்டுவிட்டான், செய்தி கேக்கேலயா?"


"வாட்" என்றபடி அருகிலிருந்த கதிரையில் பொத்தென்று இருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


வைஷாலி....


லண்டனில் ருவிட்டிக்கொண்டிருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சந்தோஷின் ருவிற்றரில் சிஐடி ஆர்வத்துடன் மூழ்கியிருந்தான்.


"santhosh
@vaishali I wil find n send u once I reached office
3 hours ago via Echofon"


இதுதான் கடைசியாக சந்தாஷ் ருவீற்றியது. ஆனால் லைவ்வாக வைஷாலியின் ரூவீற்கள் வந்துகொண்டிருந்தன.


"vaishali
@santhosh where r u? send me immediately.
1 minutes ago via Web"

Twitter DM களைப் பார்த்தான். சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான். ஜீமெயில் உரையாடல்களைப் பார்ததான். மீண்டும் சிரித்தான். பேஸ்புக் அஞ்சல்களைப் பார்த்தான், சிரித்தான்.
கடைசியாக திறந்திருந்த பேஸ்புக் உரையாடல்கூட வைஷாலியிடமிருந்து.


"மாத்தயா... லவ்வு கலக்கலாய் இருக்கு.. பாரின் பொண்ணு.. போட்டோ இல்லையா" நக்கலாகக் கேட்டான். சந்தோஷுக்கு சிரிப்பதா அழுவதா புரியவேயில்லை.


திடீரென்று ஏதோ யோசித்தவனாக, லப்டொப்பில் கோப்புக்களை தேடினான் சிஐடி. பின்னர் இருவரிடமும் "இவனில எப்பெப்ப சஸ்பெக்ற் பண்ணினாங்கள், திகதிகளைச் சொல்லுங்கோ"


"போன மாதம் 17, 18 அதோட முந்தநாள்" மேசையிலிருந்த பேப்பர் துண்டொன்றைப் பார்த்துச் சொன்னான் மற்றவன்


அதே நாட்களில், குறித்த நேரங்களில் பேஸ்புக், ஜீமெயில், உரையாடல்கள், ரூவீற்றுக்கள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவனது செய்தி சேகரிப்புகளுடன் அவனுக்கும் வைஷாலிக்குமிடையான சமாச்சாரங்களே அதிகமாக இருந்தன.


நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்த அவன் "பையன்ல விசயம் இல்லைப்போல.. வேலையும் லவ்வுமாய்த்தான் மாத்தயா இருக்கிறார். அந்த திகதிகளில் மாத்தயா பாரின் பொண்ணோட விளையாடிக்கொண்டு இருந்திருக்குது. ரூவீற்ருக்கள் எல்லாம் Echofon இற்கூடாகத்தான் மாத்தயா செய்திருக்கு. லப்டொப்பிலயும் பெரிசா ஒண்டுமில்ல. பையனிலயும் விசயமில்லைப்போல.. சும்மா இரண்டு தட்டுத் தட்டிப்போட்டு ஒரு மணித்தியாலத்தால கொண்டுபோய் அந்த இடத்தில விட்டுட்டு வாங்கோ.. வார்ணிங்க் பண்ணிட்டு விடுங்கோ" என்றவன் சந்தோஷின் ருவிற்றரைப் பார்த்துவிட்டு கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தான்.


Echofon இல் தட்டச்சினான்.


"@vaishali I LOVE YOU MY DEAR VASHU KUTTI" send இனை அழுத்திவிட்டு சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான்.


சந்தோஷுக்கு என்ன நடக்குதெண்டு புரியவில்லை. லப்டொப்பில் என்னத்தைச் செய்கிறானே என்று கவலைப்படும் நிலையிலும் அவன் இல்லை.


சிறிது நேரத்தில் வந்த Twitter DM இனை திறந்தான் சிஐடி.


"vaishali Wot happnd2U santhosh.Thtz a public tweet.Plz rmov it.My acca's too in it.Plzzz :("


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


பின்னர் சந்தோஷ் வீடு வந்து சேர்ந்ததும், லாவண்யா தொடர்பு கொண்டதும், சந்தோஷ் மருத்துவமனைக்கு வர முயற்சித்ததும், ஹரீஷ் வரவேண்டாம் வீட்டிலேயே இரு என்றதும், லாவண்யாக்கும் ஹரீஸுக்குமிடையான அரும்புக் காதல் மருத்துவமனையிலேயே மலர்ந்ததும் (யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)
என்று நட்பு, காதல், சென்ரிமென்ட், புரிந்துணர்வு எல்லாம் கைகோத்துக் கலகலத்தது. சந்தோஷின் ருவிட்டர் கதைகேட்டு ஹரீஸும் லாவண்யாவும் லவீற்ற (love + tweet) ஆரம்பித்ததும் வேறு கதை.


- சுபம் -


மதுவதனன் மௌ | cowboymathu


(எல்லாம் இப்போதைக்குச் சுபமாக இருந்தாலும், இன்னும் நான்கு மாதங்களில் வைஷாலி லண்டனிலேயே இன்னொரு பையனை லவ்வப் போவதையும், சந்தேஷுக்கு டாடா காட்டப்போவதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்.)

 

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

கடந்த 17 மாதங்களாக அவளை நான் அறிந்திருக்கிறேன். அல்லது அறிந்து கொண்டுருக்கிறேன். நானல்ல அவளை ஒரு முறை பார்க்கும் எவரும் அல்லது எவனும் அறிய ஆரம்பிப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமூட்டக்கூடிய விடயமில்லை.



நாளொரு கலரும் பொழுதொரு ஸ்டைலுமாக உடையணிவாள். அந்தந்தக் கலருக்கேற்ற பாதணிகளோ பலவிதம். எல்லாக் கலரையும் கலந்து ஊத்தின மாதிரி ஒரு செருப்பு வச்சிருக்கிறன். எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு.

பனியன் போட்டு சேட்டும் போட்டு பரவசமா பார்த்து நடக்கிறவன் நான். பனியன் மட்டுமே போட்டு (யோவ்.. மேலாடையை பற்றி மட்டும்தான் கதைக்கிறேன்) பார்த்தாலே பரவசமா நடக்குறவள் அவள்.


ஐந்தாறு நாளுக்கொருக்கா, ஐந்தாறு மயிரை வெட்டிச் சேப் ஆக்க ஐநூறு கொடுப்பாள் அவள். ஸ்றெயிற் பண்ணின மயிராம் அது. மண்ணாங்கட்டி சேப்பிங்கும் மயிரில் ஸ்றெயிற்றிங்கும். மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.


தொலைவெண்டாலும் தொங்கிக்கொண்டு பஸ்ஸில போவேன். காரில் போய்ப் போய் போரடிக்குதாம் என்று பஸ்ஸில போவதற்கு விருப்பப்படுவாள். பஸ் பிழைச்சா கொண்டக்ரரிட்ட காசு வேண்டிக்கொண்டு அடுத்த பஸ் எனக்கு. கார் பிழைச்சா பக்கத்தில விட்டுட்டு கப் (Cab) பில போவது அவளுக்கு.

அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள். நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது. அவளுக்கும் கூடத்தான்.



சரி இந்தளவுக்கு எப்படி ஒப்பிட முடியுது எண்டு யோசிக்கிறீங்களா? சிம்பிள்.. நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது. நான் போன பஸ்ஸும் அவளின்ர காரும் அக்சிடன்ற் ஆக, மயங்கிக் கிடந்த அவளை இழுத்து வெளியில போட்டுட்டு அவளின்ர ICE இலக்கத்திற்கு போன் பண்ணினதுதான் நான் செய்தது. பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன். இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.


கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 





ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

"என்ன நீங்கள், இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் கூடநேரம் படுக்கவிடமாட்டீங்களா?"

மெத்தையில் படுத்தபடி கேட்டவளை நினைக்க கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. பின்னே என்ன, அதிகாலை ஐந்துமணிக்கே எழும்பி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட ஏழு மணிக்கு வெளியில் செல்லவேண்டிய தேவை இருந்ததால் வீட்டைச் சுத்தப்படுத்தி, ஃபிரிஜ்ஜில் இரவே ஊறப்போட்டிருந்த மாவில் எனக்கும் அவளுக்கும் போதுமான தோசை சுட்டு, சின்னதாய் ஒரு சாம்பாரும் செய்துவிட்டு இறுதியில காப்பி போட்டுக்கொண்டுவந்து அவளை எழுப்பினால் இப்படிச் சொல்கிறாள்.

ஆணாக நான் இவ்வளவு வேலைகளும் செய்கிறேனே ஒத்தாசைக்கு ஒரு உதவிகூடச் செய்யக் கூடாதா என மனம் நினைத்தாலும், அவள் வந்த காலத்திலிருந்து அப்படித்தான், நானும் நன்றாக இடம் கொடுத்துவிட்டேன். ஐந்து வருடம் காத்திருந்து காதலித்த முகம், அவள் என்ன சொன்னாலும் அவளது முகம் என்னை கீழ்ப்படிய வைத்துவிடுகிறதே. அவள் மேலுள்ள பாசம் வேறு அவளைக் கஷ்டப்படுத்த விடமாட்டேன் என்கிறது.

ஞாயிற்றுக்கிழமை எண்டாலே வழமையா இப்படித்தான். மெத்தையை விட்டு எழும்ப ரொம்ப நேரமாகிவிடும்.

"காப்பி போட்டுக்கொண்டந்து வைத்திருக்கிறேன், குடிச்சிட்டுப் படு"


"ஹையா...என்ர செல்ல அப்பா, ரொம்ப தாங்க்ஸ்"

என் செல்ல மகள் வைஷ்ணவியின் இந்தக் கெஞ்சல்களிலேயே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடம் காத்திருந்து காதலித்து கரம்பிடித்த என் அன்பு மனைவி அபர்ணா தனது அழகிய முகச் சாயலிலேயே ஒரு குழந்தையைத் தந்துவிட்டு அன்றே உலகைவிட்டுப் போய் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன்.

அன்றிலிருந்து வைஷூ குட்டியே எனது வாழ்க்கை; அவளது செல்லக் கெஞ்சல்களே எனது சக்தி; உடல் களைப்பில் மனம் என்னதான் நினைத்தாலும் அவளுக்குக் கடமை செய்வதிலேயே எனக்குச் சந்தோசம்.

"அப்பா, காப்பி இண்டைக்கும் நல்ல டேஸ்ட், இன்னும் கொஞ்ச நாளில அப்பாவுக்கு இந்த வைஷூ காப்பி போட்டுத்தருமாம்"

நான் ஒன்றும் சொல்லவில்லை, குண்டுக் கன்னங்களைக் கிள்ளிவிட்டு புன்னகைத்தேன்.

பி.கு : அன்று ஞாயிற்றுக் கிழமை ஏழு மணிக்கு வெளியில் போகவேண்டியதேவையாலும் மேட்டர் கொஞ்சம் சீரியஸா இருந்ததாலயும் கொஞ்சம் சலிப்பு வந்திருந்தது.

- மதுவதனன் மௌ. -