நா
Showing posts with label பேருந்துக் கதைகள். Show all posts
Showing posts with label பேருந்துக் கதைகள். Show all posts

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை
ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.

பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.

எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.

சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.

இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.

"எக்ஸ்கியூஸ் மீ..."

காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.

எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."

அதே அழகான பெண்.

ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.

"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"

"ஓ.கே." (இனி தமிழாக்கம்)

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"

மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.

"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"

"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"

என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு

"அப்படியொண்டும் இல்லை"

"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"

அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.

இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.

யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.

எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...

இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)

பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 





ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது